கடவுள் வாழ்த்துப் பாசுரங்கள் - 11



பெரியாழ்வார்
திருமொழி
- 11

அல்வழக்கு ஒன்றும் இல்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்
செல்வனைப் போல திருமாலே நானும் உனக்குப் பழவடியேன்
நல்வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவிப்
பல்வகையாலும் பவித்திரனே உன்னை பல்லாண்டு கூறுவனே.

[விளக்கம்]
லக்ஷ்மீநாதனே ! திருக்கோட்டியூர் நகரத்தின் தலைவனான செல்வ நம்பியை போல நானும் உனக்கு பழைமையான அடிமை கண்டாய் ! நல்ல முறையில்(உள்ளத்தில் அன்புடன்) நாராயண, கேசவ, மாதவ என்று உன்னுடைய நாமங்களை பரவி உனக்கு பல்லாண்டு பாடுவேன் !

(சொற்பொருள்)
அல்வழக்கு - தகுதியற்ற செயல்
துங்கன் - உயர்ந்தவன்.
பவித்திரன் - தூயவன்.

[கூடுதல் விளக்கம்]
எப்பொழுதும் உயர்ந்த செயல்களையே புரியும் சாது ஜனங்களால் பெருமை பெற்ற நகரம் திருக்கோட்டியூர். அதன் தலைவரான செல்வநம்பி திருமால் மீது உயர்ந்த பக்தி உடையவர்.
"நான் திருமாலின் அடிமை" என்ற அபிமானத்தினால் உயர்ந்தவர். அதனால் ஆழ்வார் அவரை "அபிமானதுங்கன்" என்று குறிப்பிடுகிறார்.





கடவுள் வாழ்த்துப் பாசுரங்கள் - 10



பெரியாழ்வார்
திருமொழி - 10

எந்நாள் எம்பெருமான் உன் தனக்கு
அடியோம் என்று எழுத்துப்பட்ட*
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில்
வீடுபெற்று உய்ந்தது காண்*
செந்நாள் தோற்றித் திருமதுரையுள்
சிலை குனித்து* ஐந்தலைய
பைந்நாகத்தலைப் பாய்ந்தவனே
உன்னைப் பல்லாண்டு கூறுதுமே.

[விளக்கம்]
எங்கள் தெய்வமே ! உனக்கு நாங்கள் அடிமைகளாக என்று மாற்றம் அடைந்தோமோ அன்றே எங்கள் குடி நல்ல கதியை அடைந்தாகிவிட்டது. வடமதுராவில் ஒரு மங்களகரமான தினத்தில் அவதாரம் செய்தாய் ! பிருந்தாவனத்தில் காளியன் தலையில் நர்த்தனம் ஆடினாய் !
திவ்ய பூமியான மதுராவில் வில்லை முறித்தாய் ! உனக்கு பல்லாண்டு சொல்லக் கடவோம் !!

(சொற்பொருள்)
பைந்நாகம் - (காளியன் என்ற பெயர் பெற்ற) வலிமை பொருந்திய நாகம்.
சிலை - வில்
குனித்தல் - முறித்தல்

[கூடுதல் விளக்கம்]

"செந்நாள் தோற்றி" - மதுராவில் ஒரு அஷ்டமி தினத்தில் நடு இரவில் சிறைச்சாலையில் கிருஷ்ணாவதாரம் நிகழ்கிறது. கம்சனிடம் கொண்ட பயத்தினால் வசுதேவர் கிருஷ்ணனை தன்னுடைய நண்பரும் சகோதரரும் ஆன நந்தகோபருடைய வீட்டில் கிடத்துகிறார். நந்தருடைய வீட்டில் யசோதை செல்லமாக கோகுலத்திலும் பின்னர் பிருந்தாவனத்திலும் கண்ணன் பல விதமான லீலைகள் புரிந்த வண்ணம் வளர்கிறான்.

ஐந்தலைய பைந்நாகத்தலைப் பாய்ந்தவனே - பிருந்தாவனத்தில் கண்ணன் நிகழ்த்திய காளிங்க நர்த்தனம் என்ற லீலையை நினைந்து பாடுகிறார்.

கண்ணனை மதுரைக்கு வரவழைத்து கொல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கம்சன் ஒரு சூழ்ச்சி செய்தான். தனுர் யாகம் என்றொரு யாகத்திற்கு ஏற்பாடு செய்தான். "தனுர் யாகத்தில் பலராமனும் கண்ணனும் பங்கு பெற வேண்டும்" என்று கபடமான அழைப்பினை விடுத்தான். அதனையும் ஏற்று பிருந்தாவனத்தில் இருந்து நந்தகோபன், ஆயர் குல பெரியோர், பலராமன் மற்றும் தன் நண்பர்கள் புடை சூழ கண்ணன் மதுரா நகரம் வந்தான். மதுராவில் கம்சனுடைய யாகசாலையை அடைந்த கண்ணன், மதுராவின் உண்மையான நாயகன் வந்து விட்டதை மதுரா ஜனங்கள் புரிந்து கொள்ளும் வகையிலும், தான் மதுரா வந்து விட்டதை கம்சனுக்கு அறிவிக்கும் முகமாகவும், வாயிலில் தொங்க விடப்பட்டு இருந்த பலம் பொருந்திய வில்லினை முறித்தான். அப்படி அவன் வில்லினை உடைத்தது பெருத்த இடி போன்றதோர் சப்தத்தை உண்டு பண்ணியது. அந்த இடி போன்ற நாதம் அதர்மத்திற்கு சாவுமணி அடிப்பது போன்று இருந்தது. இந்த லீலையை பல ஆழ்வார்களும் பாடி பரவசம் கொள்கிறார்கள்.

கடவுள் வாழ்த்துப் பாசுரங்கள் - 9


பெரியாழ்வார்
திருமொழி - 9

உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை
உடுத்துக் கலத்ததுண்டு*
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன
சூடும் இத்தொண்டர்களோம்*
விடுத்த திசைக் கருமம் திருத்தித்
திருவோணத் திருவிழவில்*
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே.

[விளக்கம்]
உன்னுடைய அடியவர்களாகிய நாங்கள் உனக்கு படைக்கப்பட்டு மாறிய உணவையே உட்கொள்கிறோம். உனக்கு சாற்றிய துளசி மாலைகளையே விரும்பி வாங்கி அணிந்து கொள்கிறோம். திவ்யமான உன்னுடைய திருமேனியின் சம்பந்தம் பெற்ற ஆடைகளையே அணிந்து கொள்கிறோம். எங்கள் எஜமானனான நீ உன் அடியார்களான எங்களுக்கு இடும் வேலைகளை நன்றாக செய்து உன்னை மகிழ்விப்போம். பாற்கடலில் பாம்பணையில் அழகாக பள்ளி கொள்ளும் உனக்கு, சிறந்த இந்த திருவோண தினத்தில் பல்லாண்டு பாடுவோம்.

(சொற்பொருள்)
பீதக ஆடை - மஞ்சள் நிற ஆடை
துழாய் - துளசி
திருவோணம் - திருமாலுக்கு உகந்த நக்ஷத்திரம்.

[கூடுதல் விளக்கம்]
இன்றும் திருவல்லிக்கேணி போன்ற திருமால் ஆலயங்களில் பெருமாள் உடுத்தி இருந்த வேஷ்டி முதலிய வஸ்திரங்கள் அடியார்களுக்கு ஏலம் இடப்படுகின்றன.


கடவுள் வாழ்த்துப் பாசுரங்கள் - 8


பெரியாழ்வார் திருமொழி - 8

நெய்யிடை நல்லதோர் சோறும்
நியதமும் அத்தாணிச் சேவகமும்*
கையடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு
காதுக்குக் குண்டலமும்*
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து
என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல*
பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப்
பல்லாண்டு கூறுவனே.

[விளக்கம்]
கருடனை கொடியாக உடையவனே! உண்பதற்கு ருசியான உணவு, உண்ட பின் தாம்பூலம், அணிய நல்ல அணிகலன்கள், உடலில் பூசிக் கொள்ள வாசனை மிகுந்த சந்தனம் என்று பல வகையிலும் எனக்கு அருள் புரிந்து என்னுடைய மனதையும் தூய்மை செய்யும் உனக்கு பல்லாண்டு கூறுவேன் !


[கூடுதல் விளக்கம்]
"கொடியோன்" என்பது கொடியை உடையவன் என்ற பொருள் தரும்.
கருடன் நாகர்களின் பகைவன். திருமால் தன்னுடைய உடலில் கருடனை ஒரு கொடியாக சுற்றி கொண்டு விளங்குகிறார். அதனால் "நாகப் பகை கொடியோன்" என்று அழைக்கப் பெறுகிறார்.

த்வாரகா நாதனான கிருஷ்ணனுடைய திவ்யமான தேரின் கொடியில் கருடச் சின்னம் பொறிக்கப் பெற்று இருக்கும். கருடனை தேர்க்கொடியாக உடைய கிருஷ்ணனுக்கு பாடிய பாசுரமாகவும் பொருள் கொள்ளலாம்.

பேரன்பு மயமான கிருஷ்ணன் தன்னுடைய பக்தர்களின் எல்லா விதமான தேவைகளையும் ஆசைகளையும் பூர்த்தி செய்து தன்னை விட்டு அகலாத வண்ணம் பார்த்துக் கொள்கிறான் என்பது பாசுரத்தின் உட்குறிப்பு.


(சொற்பொருள்)
அடைக்காய் - பாக்கு; தாம்பூலம்;
நியதமும் - எப்பொழுதும்.
சேவகம் - ஊழியம்.
அத்தாணிச் சேவகம் - கொலு மண்டபத்தில் பெருமாள் வீற்றிருக்கும் வேலையில் அவருக்கு செய்யும் ஊழியம் (மாலை அணிவித்தல், சாமரம் வீசுவது முதலியன) ; நீங்காத பகவத் சேவை அல்லது அனுபவம் என்றும் பொருள் கொள்வர்.
மெய் - உடல்
மெய்யிட நல்லதோர் சாந்து - உடலில் பூசிக் கொள்ள வாசனை மிகுந்த சந்தனம்.
வெள்ளுயிர் - வெண்மையான உயிர்; உள்ளத்தூய்மை உடைய உயிர்




கடவுள் வாழ்த்துப் பாசுரங்கள் - 7


பெரியாழ்வார் திருமொழி - 7

தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி
திகழ் திருச்சக்கரத்தின்*
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று
குடிகுடி ஆட்செய்கின்றோம்*
மாயப் பொருபடை வாணனை
ஆயிரந் தோளும் பொழிகுருதி
பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே.


[விளக்கம்]
வட்ட வடிவானதும், செம்மையான ஒளியுடன் சுடர் விட்டுக்கொண்டு நெருப்பை விட சிறப்பாக பொலிந்து மின்னுவதும், மங்கலமயமானதும் ஆன திருமாலின் சக்கரம், முன்பு ஒரு சமயம் பாணாசுரனின் மிகுதியான தோள்களை துணித்தது. சுதர்சனம் என்ற புகழ்ப்பெற்ற அந்த சக்கராயுதத்தை பயன்படுத்துவதில் வல்லவனான கிருஷ்ணனுக்கு, பக்தர்களாகிய நாம் பல்லாண்டு கூறுவோம் !!

[கூடுதல் விளக்கம்]
வாணன் என்கிற பாணாசுரன் ப்ரஹலாதனுடைய வம்சத்தில் பிறந்த அசுரன். ஆயிரம் கைகளை பெற்ற இந்த அசுரன், மாயப் போர் புரிவதில் தேர்ந்தவன். தன்னுடைய புஜ பராக்ரமத்தினால் யாவரையும் வென்று மிகுந்த செருக்கை அடைந்தான். அவனுடைய ஆணவத்தை அழிக்கும் பொருட்டு த்வாரகாவின் நாதனான கிருஷ்ணன் அவனுடன் போர் புரிந்து தன்னுடைய சக்கராயுதத்தினால் அதிகமான கைகளை துணித்தான். இவ்வாறு அசுரனை கொல்லாமல் அவனுடைய ஆணவத்தை மட்டும் கொன்று அருள் புரிந்த கிருஷ்ணனுக்கு ஆழ்வார் பல்லாண்டு பாட வேண்டுகிறார்.

இந்த பாசுரத்தில் "கோயிற் பொறி" என்பது சங்கு சக்கர சின்னம் இடும் சாதனத்தை குறிக்கும்.
மஹாவிஷ்ணுவின் அடியார்கள் தங்களுக்கு அவனை விட்டால் வேறு கதி இல்லை என்று
சரணாகதி செய்வர். அவ்வாறு சரணாகதி செய்து விட்டதற்கு அடையாளமாக தங்களுடைய கைகளில் சங்கு சக்கர குறியிட்டு கொள்வார்கள். இவ்வாறு அடையாளம் இட்டுக் கொண்டு வழி வழியாக பகவானுக்கு தொண்டு செய்யும் தொண்டர்கள் நாம் என்று ஆழ்வார் சொல்கிறார்.
(நாம் என்றுமே இறைவனிடம் நெருங்கிய தொடர்பை உடையவர்கள் என்பது குறிப்பு.)


(சொற்பொருள்)
ஆழி - வட்டம்; சக்கரம்
பொறி - குறியிடும் சாதனம்



கடவுள் வாழ்த்துப் பாசுரங்கள் - 6


பெரியாழ்வார் திருமொழி - 6

எந்தை தந்தை தந்தை
தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி*
வந்து வழி வழி ஆட்செய்கின்றோம்
திருவோணத் திருவிழவில்*
அந்தியம் போதில் அரி உருவாகி
அரியை அழித்தவனைப்*
பந்தனை தீரப் பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே.

[விளக்கம்]
என்னுடைய தந்தை, பாட்டனார், அவருடைய பாட்டனார் என்று ஏழு தலைமுறைகளாக பகவானுக்கு சேவைசெய்கிறோம். திருவோண நக்ஷத்திரத்திலே நரஸிம்ஹனாக தோன்றி, பகைவனான இரண்யகசிபு என்கிற அசுரனைகொன்ற ஹரியின் களைப்பு தீர "பல்லாண்டு" பாடுங்கள் !

[கூடுதல் விளக்கம்]
பகவான் என்றும் பக்தர்கள் வசப்பட்டவன். அவர்களுடைய துன்பத்தை பொறுக்க முடியாதவன். இரண்யகசிபு பரம பாகவதனான ப்ரஹலாதனை பல விதமான கொடுமைகளுக்கு ஆட்படுத்தியதால் இறைவனுடைய கோபத்திற்கு ஆளானான்.

ஆழ்வார் பகவான் மீது அளவற்ற அன்பை உடையவர் என்பதால் அசுரனை கொன்ற காரியம் பகவானுக்கு களைப்பை உண்டு பண்ணியதாக நினைத்து அந்த களைப்பு நீங்க "பல்லாண்டு" பாடுகிறார். நம்மையும் பாட தூண்டுகிறார்.

(சொற்பொருள்)
அம் - அழகிய
அந்தியம் போது - அழகிய மாலைப் பொழுது
பந்தனை - சோர்வு, ஆயாசம்
அரி - சிங்கம், எதிரி, குரங்கு என்று பல பொருள் கொண்ட பதம்.





கடவுள் வாழ்த்துப் பாசுரங்கள் - 5



பெரியாழ்வார் திருமொழி - 5

அண்டக்குலத்துக்கு அதிபதியாகி
அசுரர் இராக்கதரை*
இண்டக்குலத்தை எடுத்துக் களைந்த
இருடீகேசன் தனக்கு*
தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்து
அடி தொழுது ஆயிரநாமம் சொல்லிப்
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே.


[விளக்கம்]
(பகவானின்) தொண்டர் கூட்டத்தில் உள்ளவர்களே ! வாருங்கள் !!
எல்லா உலகங்களுக்கும் தலைவானாகவும், சக உயிர்களுக்கு தீமை புரியும் அசுர ராக்ஷச கூட்டத்தை வேருடன் களைந்து அனைவருக்கும் பாதுகாவலானாகவும், முற்றும் துறந்த முனிவர்கள் வணங்கும் தெய்வமாகவும் விளங்கும் ஹ்ருஷீகேசனை போற்றுவோம். அவனுடைய அடி தொழுது, கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு மதுசூதனா, திருவிக்ரம, வாமனா, ஸ்ரீதரா, ஹ்ருஷீகேசா என்று அவனுடைய நாமங்களை பாடி பரவுவோம். பொறுமையுடன் ஆயிர நாமங்களையும் உளம் குளிர சொல்லுவோம்.

(சொற்பொருள்)
குலம் - 1. கூட்டம், குழு; 2. இனம்
அண்டம் - உலகம்
அண்டக்குலம் - பல்வேறு உலகங்களின் கூட்டம்.
இராக்கதர் - இராக்ஷசர்கள்.
இண்டர் - கொலை முதலிய இழிவான செயல்களை புரிபவர். (கொலைஞர்)
இண்டக்குலம் - கொலைஞர் கூட்டம்.
இருடி - புலன்களை அடக்கிய முனிவர்.
இருடீகேசன் - முனிவர்களுக்கு எல்லாம் தலைவன். (ஹ்ருஷீகேசன்) (புலன்களுக்கு தலைவன் என்றும் பொருள் படும்.)
ஆயிர நாமம் - விஷ்ணு ஸஹஸ்ர நாமம்.

கடவுள் வாழ்த்துப் பாசுரங்கள் - 4



பெரியாழ்வார் திருமொழி - 4

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து
எங்கள் குழாம் புகுந்து*
கூடு மனம் உடையீர்கள்
வரம்பொழி வந்து ஒல்லை கூடுமினோ*
நாடு நகரமும் நன்கு அறிய
"நமோ நாராயணா" என்று*
பாடு மனம் உடை பத்தருள்ளீர்! வந்து
பல்லாண்டு கூறுமினே.

[விளக்கம்]
இறை அனுபவம் வேண்டும் என்ற விருப்பம் உடையவர்களே! இன்னமும் உங்களை ஒரு வரம்பிற்குள் கட்டி போட்டு கொள்ள வேண்டாம். விரைவாக வாருங்கள் ! நாடு நகரம் எல்லாம் அறியும் வண்ணம் "நமோ நாராயணா" என்று பாடும் மனம் உடைய பக்தர்கள் நீங்கள் என்றால், காலம் தாழ்த்தாமல் விரைவாக வந்து எங்கள் குழுவில் கூடி பகவானுக்கு பல்லாண்டு பாடுங்கள்.

(சொற்பொருள்)
ஏடு - உடல்
ஒல்லை - விரைவு; வேகம்
பத்தர் - பக்தர்

[கூடுதல் விளக்கம்]
"ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்" - உயிர் நீங்கி உடல் பூமிக்கு இரையாவதற்கு முன்னம்.
மிகவும் வயதான காலத்தில், இன்னும் சில வருடங்களோ நாட்களோ மட்டுமே உள்ள அளவில்;
அந்த அளவில் நாம் இறைவனுடய அடியார் ஆகி கொள்ளலாம் என்று என்னும் பக்தர்களை நோக்கி அமைந்துள்ள பாசுரம்.
இறை நம்பிக்கை உடைய பக்தர்கள் பலர், தங்களுடைய மனதில் இறைவனின் புகழை பாடி பரவ வேண்டும் என்ற விருப்பம் உடையவர் ஆக இருந்தாலும், பகவத் அனுபவம் பெறுவதற்கு தகுந்த காலம் இதுவல்ல என்று தாங்களே முடிவு செய்வதுண்டு. பல விதமான வரம்புகளையும் இட்டுக் கொள்வதுண்டு. "இந்த வேலையை முடித்து விட்டு பின்னர் கோயிலுக்கு செல்வோம்; வயதான பிறகு இறைவனிடம் செல்வோம்; இப்பொழுது என்ன அவசரம்?" என்று நினைக்கும் பக்தர்களை இப்பொழுதே இறை அனுபவம் பெறுவதற்காக ஆழ்வார் அழைக்கிறார்.

மிகவும் இளம் வயதிலேயே நம்மை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் செயலானது அன்று அலர்ந்த மலரை அவனுக்கு அர்ப்பணிப்பது போன்றது என்பது ஆன்றோர் மொழி.

"நாடு நகரமும் நன்கு அறிய நமோ நாராயணா என்று" - பக்தர்கள் பகவானின் நாமங்களை பாட அச்சமோ வெட்கமோ படுவதில்லை என்பது குறிப்பு.


கடவுள் வாழ்த்துப் பாசுரங்கள் - 3



பெரியாழ்வார் திருமொழி - 3

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல்
வந்து மண்ணும் மணமும் கொண்மின் *
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள்
குழுவினில் புகுதல் ஒட்டோம்*
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள்
இராக்கதர் வாழ்* இலங்கை
பாழாளாக படை பொருதானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே.


[விளக்கம்]
முறையான ( முழுமையான ) வாழ்க்கை வாழ வேண்டும் என்ற விருப்பம் உடையவர்களே, வாருங்கள் ! வந்து திருமண் (நாமம்) இட்டு கொள்ளுங்கள். திருமால் அணிந்த துளசி மாலையை சூடிக் கொள்ளுங்கள். ராக்ஷஸர்கள் வாழ்ந்த இலங்கையை ஆண்ட ராவணனின் ஆட்சி பாழ் ஆகும் படி யுத்தம் செய்த ராமனை போற்றுவோம் !

(சொற்பொருள்)
வாழ் - முறைமை; ஒழுக்கம்
இராக்கதர் - ராக்ஷஸர்
படை - ஆயுதம்
பொருதல் - வீசுதல்
ஆள் - ஆட்சி
பாழாளாக - பாழ் + ஆள் + ஆக
பாழாள் => ஆட்சி பாழ்படுதல்
ஆட்படுதல் - அடிமை ஆதல்
கூழ் - உணவு; பொருள்

கடவுள் வாழ்த்துப் பாசுரங்கள் - 2




பெரியாழ்வார் திருமொழி - 2

அடியோமோடும் நின்னோடும்
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு *
வடிவாய் நின் வல மார்பினில்
வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு*
வடிவார் சோதி வலத்துறையும்
சுடராழியும் பல்லாண்டு*
படை போர் புக்கு முழங்கும்
அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.


[விளக்கம்]
(கிருஷ்ணா!) நீயும் உன் பக்தர்களும் என்றும் கூடியே இருக்க வாழ்த்துக்கள்! உனது வலது மார்பினில் அழகாய் குடி கொண்டிருக்கும் லக்ஷ்மி பிராட்டிக்கு ஒரு குறைவும் ஏற்படாதிருக்க வாழ்த்துக்கள் ! அழகிய வடிவுடன் சுடர் விட்டு ப்ரகாசிக்கும் உனது வலது கை சக்கரத்திற்கும் ஒரு குறைவும் வராது இருக்க வாழ்த்துக்கள் ! போர் களத்தில் ஆயுதமாய் புகுந்து எதிரிகளை நடுங்க செய்யும் பாஞ்சஜன்யம் என்கின்ற உனது சங்கும் என்றும் ஒரு குறைவும் இன்றி இருக்க வாழ்த்துக்கள் !

(சொற்பொருள்)
படை - ஆயுதம்
புக்கு - புகுந்து
ஆழி - சக்கரம்
ஆர் - கூர்மை; அழகு
வடிவார் சோதி - வடிவு + ஆர் + சோதி

[கூடுதல் விளக்கம்]
அடியார்கள் - பக்தர்கள்; இறைவனை தங்கள் அன்பினால் கட்டுபவர்கள்; மிகுந்த அன்புடன் பகவானுக்கு தொண்டு செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள்; எப்பொழுதும் பகவான் அருகிலேயே இருக்கும் விருப்பம் உடையவர்கள்.

பாஞ்சஜன்யத்தின் மகிமை:
மகாபாரத யுத்தத்தில் கண்ணன் தன்னுடைய பாஞ்சசன்னியத்தை எடுத்து கம்பீரமாக முழங்க, அந்த இடி போன்ற முழக்கத்தை கேட்டே கௌரவ சேனையினர் துணிவை இழந்து மனச்சோர்வை எய்தினர்.

பெரியாழ்வார் பகவத் தரிசனம் பெற்ற சமயத்தில் இந்த "பல்லாண்டு" பாசுரங்களை பாடுகிறார். சங்கு சக்கரத்துடன் பிராட்டியுடன் கூடிய பெருமானை தரிசனம் செய்த பெரியாழ்வாரின் கண்ணும் மனமும் களிக்கின்றன. அந்த அனுபவம் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்ற விருப்பம் தொனிக்க பாடுகிறார்.


கடவுள் வாழ்த்துப் பாசுரங்கள் - 1



பெரியாழ்வார் திருமொழி - 1

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு*
பலகோடி நூறாயிரம் *
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா* உன்
சேவடி செவ்வி திருக்காப்பு.


[விளக்கம்]
மல்லர்களை அடக்கி ஆண்ட திடமான தோள்களை உடைய கிருஷ்ணா ! உன் சிவந்த பாதங்களின் அழகுக்கு என்றென்றும் ஒரு குறைவும் வராது இருக்க வாழ்த்துக்கள் !!

[கூடுதல் விளக்கம்]
ஒரே சமயத்தில் கண்ணன் திண்மையான தோள்களை உடையவனாகவும், மென்மையான பாதங்களை உடையவனாகவும் பெரியாழ்வாருக்கு காட்சி அளிக்கிறான். கண்ணன் திண்மையும் மென்மையும் ஒருங்கே அமைந்தவன்.

"மல்லாண்ட" கதை:
மதுராவில் கம்சனுடைய மல்லரங்கில் முஷ்டிகன், சாணூரன் என்ற இரு மல்லர்கள் பலராம கிருஷ்ணர்களுடன் சண்டையிட்டு தோல்வியை தழுவினர்.

"என்றென்றும்" என்ற பொருள் தொனிக்கும்படி, பல ஆண்டுகள், பல ஆயிரம் ஆண்டுகள், பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் என்று ஆழ்வார் நீட்டிக் கொண்டே போகிறார்.

[திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்பெற்ற பின்னனி]


கீதையில் கிருஷ்ணன், "என்னை நாடி வரும் பக்தர்கள் நான்கு வகை பட்டவர்:
தன்னுடைய துன்பம் போக வேண்டி வருபவர் முதல் வகையினர். ஏதேனும் பொருள் வேண்டி வருபவர் இரண்டாம் வகையினர். ஞானத்தை வேண்டி வருபவர் மூன்றாம் வகையினர். கடைசி வகையினர் ஞானிகள். இவர்களுள் ஞானி எனக்கு பிரியமானவன். அவன் என்னில் ரமிக்கிறான், நானும் அவனில் ரமிக்கிறேன்." என்று சொல்கிறான்.
இதனை படிப்போர் இங்கு ஒரு இயல்பான க்ரமத்தை காணலாம். துன்பத்தில் உள்ளவன் அத்துன்பம் நீங்குவதையே முதற் குறிக்கோளாக கொள்வான். வாழ்வில் துன்பங்கள் இல்லாதவன், புலன்களின் மூலம் அனுபவிக்க முடிகின்ற இன்பங்களின் மீது விருப்பம் கொள்கிறான். எண்ணற்ற இன்பங்களை அநுபவித்த மனிதன் திடீரென ஒரு நாள் பெரும் சலிப்பை அடைகிறான். தன்னுடைய இருப்பு, மற்றும் இவ்வுலகத்தின் இருப்பு குறித்து அவனுக்கு பல கேள்விகள் எழுகின்றன. மன அமைதியை முற்றும் இழந்து, கேள்விகளுக்கான பதில் என்னவாக இருக்கும் என்று பல வகையிலும் தேட முயல்கிறான். இறுதியில் அவற்றிற்கான பதில்களை அறிய இறைவனின் துணையை நாடுகிறான். அவ்வாறு இறைவனை நாடுபவன், "ஜிக்ஞாசு" என்று அழைக்க படும் மூன்றாம் வகையை சேர்ந்த பக்தன்.
மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதில்களை பகவானின் அருளினால் உணர்ந்தவன் "ஞானி".

(பகவானின் செயல்கள் விசித்திரமானவை. ஆதலால் மேற் குறிப்பிட்ட க்ரமம், ஆர்வமிகு சிற்றறிவு பூர்வமான ஒரு பார்வையே தவிர பொதுவான விதிமுறையாக கொள்ள முடியாது. உதாரணமாக, பெரும் துன்பமே ஒருவனை உண்மையை அறிய ஆவல் கொள்ள செய்யலாம்.)
ஞானம் அடைந்தவர் சதா இறை உணர்வில் திளைக்கின்றனர். நிலையான இன்பம், பேரின்பம், துன்பத்தின் சாயலே இல்லாத இன்பம், முக்தி, மோக்ஷம் என்று இந்நிலைக்கு பல விதமான பெயர்களை கூறுவர். ஆக, சதா இன்பத்தையே நாடும் மனிதன், நிலை நில்லாத பல வகைப்பட்ட இன்பங்களை துய்த்த பின், இறுதியில் இறை அருளால் நிலையான இன்பத்தை எய்துகிறான். இந்த இறுதி நிலையை அடைய எண்ணற்ற உபாயங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று பக்தி மார்க்கம்.

பக்தி மார்க்கம், "இறைவனிடம் ஆழ்ந்த நம்பிக்கை" என்பதை அடித் தளமாக உடையது. பகவான் ஒருவன் இருக்கிறான் என்று நம்பிய பிறகே அவனிடம் எதையாவது வேண்டுவது, அன்பு செலுத்துவது பற்றிய பேச்செல்லாம் எழுகிறது. மேலே கண்ணன் குறிப்பிட்ட நான்கு வகையினோரும் நம்பிக்கை உடையவர்கள். அதனாலேயே, "நான்கு வகை பக்தர்களும் உயர்ந்தோர்களே !" என்று கண்ணனே அறுதியிட்டு உரைக்கிறான். எதையாவது வேண்டுவது என்ற சாக்கில் இறைவனை அணுகும் பக்தன் நாளடைவில் பகவானை சொந்தம் கொண்டாட தொடங்குகிறான். தன்னுடைய தாயாகவோ, தந்தையாகவோ, குழந்தையாகவோ, நண்பனாகவோ, எஜமானனாகவோ, ஏதேனும் ஓர் உறவை பாவித்து மேலும் நெருக்கமாகிறான். இப்படி ஒரு பாவனை மூலம் செய்யப்படும் பக்தி "பாவ பக்தி" எனப்படும். "பாவம்", "மஹா பாவமாக" வளர்கிறது. மஹா பாவ பக்தி நாளடைவில் "ப்ரேம பக்தியாக" மிளிர்கிறது. ப்ரேம பக்தி தூய அன்பின் முதிர்ந்த நிலை. அங்கு எந்த விதமான எதிர்பார்ப்பும், வேண்டுதலும் இல்லை. ஆழ்வார்கள் அனைவரும் ப்ரேம பக்தியில் மூழ்கியவர்கள். இவ்வாறு பக்தியில் ஆழங்கால் பட்டதாலேயே "ஆழ்வார்" என பெயர் பெற்றனர்.

வில்லிபுத்தூர் ஆழ்வார், ஸ்ரீ வில்லிபுத்தூர் வடபத்ரசாயி பெருமாளிடம் பேரன்பு கொண்டவர்.
கோயில் பட்டரான இவர், தினமும் பெருமாளுக்கு அன்று மலர்ந்த மலர்களால் மாலை சாற்றி புஷ்ப கைங்கர்யம் புரிந்து வந்தார். அதனால் "மாலாகாரர்" என்றும் பெயர் பெற்றார். இவர் சித்தம் சதா மகாவிஷ்ணுவிடம் இருந்ததால் "விஷ்ணு சித்தர்" என்றும் பெயர் பெற்றார். இவர் கிருஷ்ணனிடம் யசோதை போல தாயன்பு கொண்டவர். இவருடைய பெண் ஆண்டாள்.

"பூலோக வைகுண்டம்" என்ற புகழ் பெற்ற ஸ்ரீரங்கம், திருமால் கோவில்களில் முதன்மையானதாக கருதப்படுகிறது. அளவிட முடியாத சிறப்பினால் "பெரிய கோயில்" என்று அழைக்கப்படுகிறது . இங்கு பள்ளி கொள்ளும் கிருஷ்ணன், "பெரிய பெருமாள்" என்று அழைக்கப் பெறுகிறான். சாக்ஷாத் பெரிய பெருமாளுக்கு தன்னுடைய பெண்ணை திருமணம் செய்து கொடுத்து அவருக்கு மாமனார் ஆனதால் வில்லிபுத்தூரார் "பெரிய ஆழ்வார்" என்று அழைக்கப் பெறுகிறார்.

பெரியாழ்வார் அருளிய பாசுரங்களின் எண்ணிக்கை 473. நாலாயிரத்தை தொகுத்த நாதமுனிகள் பெரியாழ்வாரின் பாசுரங்களுக்கு முதன்மை அளித்து அவற்றை முதலாவதாக வைக்கிறார். இந்த 473 பாசுரங்களுள் முதன்மையானதாக விளங்குவது "திருப்பல்லாண்டு" என்று அழைக்கப்படும் 12 பாசுரங்கள். திவ்ய பிரபந்தம் "தமிழ் வேதம்" என்று போற்றப் பெறுகிறது. வேதத்திற்கு முதன்மையானதாகவும் மங்கள ஒலியாகவும் "ஓம்" என்ற மந்திரம் விளங்குவது போல் பிரபந்தத்திற்கு பல்லாண்டு பாசுரங்கள் திகழ்கின்றன என்பது முன்னோர்கள் மொழி.

பெரியாழ்வார் வாழ்ந்த காலத்தில் மதுரையை தலை நகராக கொண்டு வல்லபத்தேவன் என்னும் பாண்டிய மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். அவன் ஒரு நாள் இரவு நகர் வலம் வரும் வேலையில் ஒரு யாத்ரீகரை சந்திக்க நேர்ந்தது. அவர் எதனால் அந்த வயதான காலத்திலும் மிகவும் சிரமப்பட்டு யாத்திரை மேற்கொள்கிறார் என்று அறிய எண்ணிய மன்னன் அவருடன் உரையாடலில் ஈடுபடுகிறான். அந்த யாத்ரீகர், "இரவிற்கு தேவையானதை பகலிலும், மழை காலத்துக்கு தேவையானதை வெயில் காலத்திலும் மறுமைக்கு தேவையானதை இம்மையிலும் தேட வேண்டும் !" என்ற அறிவுரையை மன்னனுக்கு வழங்குகிறார். இது அவனை மிகவும் சிந்திக்க வைக்கிறது. மறுமை - அதாவது இறந்த பின் உள்ள காலம் - அது எவ்வாறு இருக்கும், அப்பொழுது நமக்கு என்ன தேவை இருக்கும், அதற்கு இம்மையில் செய்ய வேண்டுவது யாது முதலான பல கேள்விகள் அவனுடைய சிந்தையில் உதயமாகின்றன. அரசனுடைய அமைச்சராக செல்வநம்பி என்ற பெயர் கொண்ட பெரியாழ்வாரின் நண்பர் பணி புரிந்து வந்தார். அவர் அரசனுடைய கவலை, இறை தத்துவத்தை நன்றாக அறிந்த, பகவத் அனுபவம் உள்ள ஒருவரால் தான் தீர்க்க முடியும் என்று நினைத்து, "பர தத்துவ நிர்ணயம் " செய்தால் இதற்கு விடை கிடைக்கும் என்று சொன்னார். (பரம் - உயர்ந்தது ) அதாவது, இம்மையிலும் மறுமையிலும் நலம் பயக்கும் உயர்ந்த விஷயம் எது? எதை செய்தால் அதனை அடையலாம்? என்று நிரூபணம் செய்ய வேண்டும். அரசன் நாட்டில் உள்ள மதத் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தான். செல்வநம்பி பெரியாழ்வாருக்கும் அழைப்பு கிடைக்குமாறு கவனித்து கொள்கிறார். பல் வேறு மதத் தலைவர்களும் கூடிய சபையில் அரசன் ஒரு பொற்கிழியை உயரமாக கட்டி, "யாருடைய வாக்கு மெய்மையானதோ அதற்கு கட்டுப்பட்டு இந்த பொற்கிழி தாழும். பொற்கிழி அவர்க்கு உரிமை உடையதாகும் !" என்று அறிவிக்கிறான். சபையில் கூடி இருந்தவர் அனைவரும் பேசி முடித்த அளவிலே பெரியாழ்வார் பேச ஆரம்பித்து, ஸ்ரீமந் நாராயணன் தான் பரம்பொருள் என்று அழகாக அனைவரும் ஏற்று கொள்ளும் வகையில் எடுத்து உரைக்க, அவ்வளவிலே அது வரை தாழாத பொற்கிழி அவரை நோக்கி தாழ்ந்தது. சபையில் கூடியிருந்த அனைவரும் கரகோஷிக்க, அரசன் மிகவும் மகிழ்ந்து பெரியாழ்வாருக்கு சகல விதமான மரியாதைகளையும் செய்து பட்டத்து யானையின் மேல் ஏற்றி நகர் வலம் வர செய்கிறான். அப்பொழுது, விளையாட்டு போட்டியில் பரிசு பெற்று திரும்பும் பிள்ளையை நோக்கி பரிவுடன் வரும் பெற்றோர் போல பெருமாளும் பிராட்டியும் கருடன் மேலேறி ஆழ்வாரை நோக்கி வருகிறார்கள். அந்த திவ்ய காட்சியை கண்ட ஆழ்வார், அதன் அழகில் மயங்கி, உள்ளத்தில் அன்பும் பரிவும் பொங்க பாடும் பாசுரங்களே இந்த "திருப்பல்லாண்டு" பாசுரங்கள்.

கண்ணனை மனத்தினால் நினைக்கலாமே !



திருமாலை - 21
பணிவினால் மனம் அதொன்றிப் பவள வாய் அரங்கனார்க்குத்
துணிவினால் வாழ மாட்டாய்த் தொல்லை நெஞ்சே! நீ சொல்லாய் !
அணியனார் செம்பொனாய அருவரை யனைய கோயில்
மணியனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கலாமே?

[விளக்கம்]

மனமே ! பவளம் போன்ற வாயினை உடைய அரங்கனிடம் பணிவாக இருந்து, மிக்க தைர்யத்துடன் (வைராக்யத்துடன்) , அவனையே நினைத்து வாழ்ந்தால் என்ன? போகட்டும் ! ஸ்ரீரங்கத்தில் கண்ணன் படுத்து கிடக்கும் கோலத்தையாவது நீ நினைக்கலாம் அல்லவா?


[கூடுதல் விளக்கம்]
கோயில் எப்படி எனில் சிறந்த பொன்னாலான மலையை (மேரு மலையை ) ஒத்தது.
மணியனார் - மணியை அணிந்து இருக்கும் கிருஷ்ணன் (அல்லது) நீல மணியை ஒத்த கிருஷ்ணன்.


ஜகன்மோஹன வேணுகோபாலன் !


கருங்கண் தோகை மயிற்பீலி அணிந்து,
கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை
அருங்கல உருவில் ஆயர் பெருமான்
அவனொருவன் குழல் ஊதின போது,
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்;
மலர்கள் வீழும்; வளர் கொம்புகள் தாழும்;
இரங்கும்; கூம்பும்; திருமால் நின்ற நின்ற
பக்கம் நோக்கி அவை பெய்யும் குணமே!
(பெரியாழ்வார்)

கிரிதாரியின் பெருமையை தினமும் கற்பேன் !

ஓடும் புள்ளேறி* சூடும் தண் துழாய்
நீடு நின்றவை* ஆடும் அம்மானே.

அம்மானாய் பின்னும்* எம்மாண்பும் ஆனான்
வெம்மாவாய் கீண்ட* செம்மா கண்ணனே.

கண்ணாவான் என்றும்* மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட* விண்ணோர் வெற்பனே.

வெற்பை ஒன்றெடுத்து ஒற்கம் இன்றியே*
நிற்கும் அம்மான் சீர்* கற்பன் வைகலே.

வைகலும் வெண்ணை* கைகலந்துண்டான்*
பொய் கலவாது* என் மெய் கலந்தானே.

கலந்து என்னாவி* நலங்கொள் நாதன்*
புலன் கொள் மாணாய்* நிலம் கொண்டானே.

கொண்டான் ஏழ்விடை* உண்டான் ஏழ்வையம்*
தண்தாமம் செய்து* என் எண் தான் ஆனானே.

ஆனான் ஆனாயன்* மீனோடு ஏனமும்*
தானானான் என்னில்* தானாய சங்கே*

சங்கு சக்கரம்* அங்கையில் கொண்டான்*
எங்கும் தானாய* நங்கள் நாதனே*

நாதன் ஞாலம்கொள்* பாதன் என்னம்மான்
ஓதம் போற்கிளர்* வேத நீரனே.

நீர்புரைவண்ணன்* சீர்ச்சடகோபன்*
நேர்தலாயிரத்து* ஓர்தல் இவையே.

(நம்மாழ்வார் திருவாய்மொழி)

இராமன் வசிக்கும் இடங்கள்

(Repost due to presence of too many labels.)
தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்*
தமருள்ளும் தண்பொருப்புவேலை* - தமருள்ளும்
மாமல்லைகோவல் மதிட்குடந்தை என்பரே*
ஏவல்ல எந்தைக்கு இடம்.
-பூதத்தாழ்வார்(இரண்டாம் திருவந்தாதி)
தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்*
தமருள்ளும் தண்பொருப்புவேலை* - தமருள்ளும்
மாமல்லைகோவல் மதிட்குடந்தை என்பரே*
ஏவல்ல எந்தைக்கு இடம்.
-பூதத்தாழ்வார்(இரண்டாம் திருவந்தாதி)
தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்*
தமருள்ளும் தண்பொருப்புவேலை* - தமருள்ளும்
மாமல்லைகோவல் மதிட்குடந்தை என்பரே*
ஏவல்ல எந்தைக்கு இடம்.
-பூதத்தாழ்வார்(இரண்டாம் திருவந்தாதி)

கேசவன் உள்ள இடங்கள்

மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் * மற்றும்
நினைப்பரிய நீளரங்கத்துள்ளான்* - எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான்* முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன்.
(பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி)

தலைக்கு அணியாவது எது ?

ஏறடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன் இராமனாய்
மாறடர்ததும் மண் அளந்ததும் சொல்லிப்பாடி வண்பொன்னிபே
ராறுபோல் வரும் கண்ணநீர் கொண்டு அரங்கன் கோயில் திருமுற்றம்
சேறுசெய் தொண்டர் சேவடி செழுஞ்சேறு என் சென்னிக்கு அணிவனே
(குலசேகர ஆழ்வார், பெருமாள் திருமொழி )

First Post

Glory unto the Lord of Tiruallikeni !!
Glory unto the devotees of the Supreme !!