கடவுள் வாழ்த்துப் பாசுரங்கள் - 7


பெரியாழ்வார் திருமொழி - 7

தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி
திகழ் திருச்சக்கரத்தின்*
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று
குடிகுடி ஆட்செய்கின்றோம்*
மாயப் பொருபடை வாணனை
ஆயிரந் தோளும் பொழிகுருதி
பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே.


[விளக்கம்]
வட்ட வடிவானதும், செம்மையான ஒளியுடன் சுடர் விட்டுக்கொண்டு நெருப்பை விட சிறப்பாக பொலிந்து மின்னுவதும், மங்கலமயமானதும் ஆன திருமாலின் சக்கரம், முன்பு ஒரு சமயம் பாணாசுரனின் மிகுதியான தோள்களை துணித்தது. சுதர்சனம் என்ற புகழ்ப்பெற்ற அந்த சக்கராயுதத்தை பயன்படுத்துவதில் வல்லவனான கிருஷ்ணனுக்கு, பக்தர்களாகிய நாம் பல்லாண்டு கூறுவோம் !!

[கூடுதல் விளக்கம்]
வாணன் என்கிற பாணாசுரன் ப்ரஹலாதனுடைய வம்சத்தில் பிறந்த அசுரன். ஆயிரம் கைகளை பெற்ற இந்த அசுரன், மாயப் போர் புரிவதில் தேர்ந்தவன். தன்னுடைய புஜ பராக்ரமத்தினால் யாவரையும் வென்று மிகுந்த செருக்கை அடைந்தான். அவனுடைய ஆணவத்தை அழிக்கும் பொருட்டு த்வாரகாவின் நாதனான கிருஷ்ணன் அவனுடன் போர் புரிந்து தன்னுடைய சக்கராயுதத்தினால் அதிகமான கைகளை துணித்தான். இவ்வாறு அசுரனை கொல்லாமல் அவனுடைய ஆணவத்தை மட்டும் கொன்று அருள் புரிந்த கிருஷ்ணனுக்கு ஆழ்வார் பல்லாண்டு பாட வேண்டுகிறார்.

இந்த பாசுரத்தில் "கோயிற் பொறி" என்பது சங்கு சக்கர சின்னம் இடும் சாதனத்தை குறிக்கும்.
மஹாவிஷ்ணுவின் அடியார்கள் தங்களுக்கு அவனை விட்டால் வேறு கதி இல்லை என்று
சரணாகதி செய்வர். அவ்வாறு சரணாகதி செய்து விட்டதற்கு அடையாளமாக தங்களுடைய கைகளில் சங்கு சக்கர குறியிட்டு கொள்வார்கள். இவ்வாறு அடையாளம் இட்டுக் கொண்டு வழி வழியாக பகவானுக்கு தொண்டு செய்யும் தொண்டர்கள் நாம் என்று ஆழ்வார் சொல்கிறார்.
(நாம் என்றுமே இறைவனிடம் நெருங்கிய தொடர்பை உடையவர்கள் என்பது குறிப்பு.)


(சொற்பொருள்)
ஆழி - வட்டம்; சக்கரம்
பொறி - குறியிடும் சாதனம்



No comments: