கடவுள் வாழ்த்துப் பாசுரங்கள் - 9


பெரியாழ்வார்
திருமொழி - 9

உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை
உடுத்துக் கலத்ததுண்டு*
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன
சூடும் இத்தொண்டர்களோம்*
விடுத்த திசைக் கருமம் திருத்தித்
திருவோணத் திருவிழவில்*
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே.

[விளக்கம்]
உன்னுடைய அடியவர்களாகிய நாங்கள் உனக்கு படைக்கப்பட்டு மாறிய உணவையே உட்கொள்கிறோம். உனக்கு சாற்றிய துளசி மாலைகளையே விரும்பி வாங்கி அணிந்து கொள்கிறோம். திவ்யமான உன்னுடைய திருமேனியின் சம்பந்தம் பெற்ற ஆடைகளையே அணிந்து கொள்கிறோம். எங்கள் எஜமானனான நீ உன் அடியார்களான எங்களுக்கு இடும் வேலைகளை நன்றாக செய்து உன்னை மகிழ்விப்போம். பாற்கடலில் பாம்பணையில் அழகாக பள்ளி கொள்ளும் உனக்கு, சிறந்த இந்த திருவோண தினத்தில் பல்லாண்டு பாடுவோம்.

(சொற்பொருள்)
பீதக ஆடை - மஞ்சள் நிற ஆடை
துழாய் - துளசி
திருவோணம் - திருமாலுக்கு உகந்த நக்ஷத்திரம்.

[கூடுதல் விளக்கம்]
இன்றும் திருவல்லிக்கேணி போன்ற திருமால் ஆலயங்களில் பெருமாள் உடுத்தி இருந்த வேஷ்டி முதலிய வஸ்திரங்கள் அடியார்களுக்கு ஏலம் இடப்படுகின்றன.


No comments: