கையினார் சுரிசங்கனலாழியர் ! நீள்வரைபோல்
மெய்யனார் ! துளபவிரையார்கமழ் நீள்முடி எம்
ஐயனார் ! அணியரங்கனார் ! அரவினணைமிசை மேயமாயனார் !
செய்யவாய் ஐயோ ! என்னைச் சிந்தை கவர்ந்ததுவே.
[விளக்கம்]
"ஐயோ ! இந்த அழகை எங்கனம் சொல்வேன்? (ஆதிசேஷன் என்கிற) நாகத்தினை தனது படுக்கையாகக் கொண்டு ஒரு பெரிய மலை போல கண் வளர்கிறான் ! அழகான சங்கு சக்கரங்களை தன் கைகளில் தாங்கியுள்ளான் ! நீண்ட மணிமுடியில் துளசி மணம் நிறைந்து பரவுகிறதே ! இன்று என் சிந்தை மோசம் போனது ! பல மாய சாகசங்கள் செய்து, ஆதரத்துடன் தன் அடியாரை ஆட்கொள்ளும் என் ஐயன், அன்பே உருவான அரங்கன், இன்று தன் அதரங்களால் என்னை ஆட்கொண்டானே !!"
[கூடுதல் விளக்கம்]
[சொற்பொருள்]
ஆர் - நிறைந்த; நன்றாக; அழகான;
சுரி - சுழி; துளை
ஆர் சுரி சங்கு - நன்றாக சுழிந்துள்ள சங்கு;
ஆர் சுரி சங்கு - கலை அழகு மிகுந்து விளங்கும் அழகான துளை சங்கு;
ஆழி - சக்கரம்
அனலாழி - தீ உமிழும் சக்கரம்; கண்ணை பறிக்கும் ஒளியுடன் திகழும் சக்கரம்;
வரை - மலை
மெய் - உடல்
துளபம் - துளசி
துளப விரை - துளசி மணம்.
துளப விரை ஆர் கமழ் - துளசி மணம் நிறைந்து கமழும்.
அணி - அழகு, அன்பு, இனிமை; அடுக்கு; வரிசை; ஆபரணம்
அரவு - நாகம்; (இங்கு ஆதிசேஷன்)
மிசை - மேல்; மேலிடம்
மேய்தல் - உறைதல்
செய்ய வாய் - சிவந்த வாய்
[ஒப்புநோக்கு]
பொதுவாக பகவானின் இதழ்களை, இதழ்களின் நிறத்தினை, தாமரை மலருடன் ஒப்பிட்டுப் பாடுவர்.
திருமாலின் கண்களும், வாயும், உள்ளங்கைகளும், பாதங்களும் சிவந்த வண்ணம் கொண்டு இலங்குவதாக எண்ணற்ற பாசுரங்கள் உள்ளன.
உதாரணமாக திருமங்கை ஆழ்வார் அருளிய கீழ்கண்ட பாசுரங்களைக் குறிப்பிடலாம்.
"கை வண்ணம் தாமரை; வாய் கமலம் போலும்;
கண்ணினையும் அரவிந்தம்; அடியும் அஃதே;" (திருநெடுந்தாண்டகம்-21)
"கார்வண்ணம் திருமேனி; கண்ணும், வாயும்
கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம்" (திருநெடுந்தாண்டகம்-18)
சில சமயம் திருமாலின் இதழ்களின் அழகை, சிவந்த நிறம் கொண்ட பவளத்தினோடு ஒப்பிடுவர்.
"என் அரங்கத்து இன்னமுதர் குழல் அழகர், கண் அழகர் வாய் அழகர்" என்று அரங்கனை கொண்டாடும் ஆண்டாள்,
"திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ"
என்று சங்கை வினவுகிறாள். (நாச்சியார் திருமொழி - 7.1)
இதே உவமையில் இன்னொரு பாசுரம் - பகவானின் திருமேனி அழகு அவன் அடியார்கள் நெஞ்சை விட்டு அகலாது என்று தொண்டரடிப் பொடி ஆழ்வார் பாடும் பாசுரம்:
"பாயும் நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திருநன் மார்வும் மரகத உருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவரிதழ்ப் பவள வாயும்
ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே." (திருமாலை - 20 )
இதே தொண்டரடிப்பொடி ஆழ்வார், கண்ணனின் இதழ்கள் சிவந்த கனியைப் போல (கோவைப் பழம்) போல இருப்பதாகப் பாடுகிறார்.
"கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனை கண்ட கண்கள்
பனி அரும்பு உதிருமாலோ!" (திருமாலை - 18)
நம்மாழ்வார், தான் வளர்த்த பச்சைக் கிளியைப் பார்த்து பாடுவதாக ஒரு பாசுரம். கிளியின் தோற்றம் அவருக்கு ராமனை நினைவு படுத்துகிறது.
இங்கு ராமன், "கிளியின் வாயினை ஒத்த சிவந்த வாயன்" என்று பாடுகிறார்.
"நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
....என் உயிர் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன், கண்ணன் கை காலினன்
நின் பசும் சாம நிறத்தன்" (திருவாய்மொழி - 9.5.6)
கண்ணனின் சிவந்த இதழ்களை, எந்த உவமையும் இல்லாமல் வெறும் "செய்யவாய்" என்று மட்டுமே குறிப்பிட்டும் நிறைய பாசுரங்கள் உள்ளன.
"கரியகுழல் செய்யவாய் முகத்து காகுத்த நம்பீ! வருக இங்கே" (பெரியாழ்வார்-2.9.2)
"மாசு அறு சோதி என் செய்யவாய் மணிக்குன்றத்தை"( திருவாய்மொழி - 5.3.1)
"காரினம்புரை மேனி நல்கதிர் முத்த வெண்ணகைச் செய்யவாய் ஆரமார்வன்"(பெருமாள் திருமொழி-2.7)
"மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே !
என்னும்; மாமாயனே! என்னும்
செய்யவாய் மணியே ! என்னும்; தன்புனல்சூழ்
திருவரங்கத்துள்ளாய் என்னும்..."( திருவாய்மொழி - 7.2.6)