பெரியாழ்வார் திருமொழி - 11
அல்வழக்கு ஒன்றும் இல்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்
செல்வனைப் போல திருமாலே நானும் உனக்குப் பழவடியேன்
நல்வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவிப்
பல்வகையாலும் பவித்திரனே உன்னை பல்லாண்டு கூறுவனே.
[விளக்கம்]
லக்ஷ்மீநாதனே ! திருக்கோட்டியூர் நகரத்தின் தலைவனான செல்வ நம்பியை போல நானும் உனக்கு பழைமையான அடிமை கண்டாய் ! நல்ல முறையில்(உள்ளத்தில் அன்புடன்) நாராயண, கேசவ, மாதவ என்று உன்னுடைய நாமங்களை பரவி உனக்கு பல்லாண்டு பாடுவேன் !
(சொற்பொருள்)
அல்வழக்கு - தகுதியற்ற செயல்
துங்கன் - உயர்ந்தவன்.
பவித்திரன் - தூயவன்.
[கூடுதல் விளக்கம்]
எப்பொழுதும் உயர்ந்த செயல்களையே புரியும் சாது ஜனங்களால் பெருமை பெற்ற நகரம் திருக்கோட்டியூர். அதன் தலைவரான செல்வநம்பி திருமால் மீது உயர்ந்த பக்தி உடையவர்.
"நான் திருமாலின் அடிமை" என்ற அபிமானத்தினால் உயர்ந்தவர். அதனால் ஆழ்வார் அவரை "அபிமானதுங்கன்" என்று குறிப்பிடுகிறார்.