கடவுள் வாழ்த்துப் பாசுரங்கள் - 11



பெரியாழ்வார்
திருமொழி
- 11

அல்வழக்கு ஒன்றும் இல்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்
செல்வனைப் போல திருமாலே நானும் உனக்குப் பழவடியேன்
நல்வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவிப்
பல்வகையாலும் பவித்திரனே உன்னை பல்லாண்டு கூறுவனே.

[விளக்கம்]
லக்ஷ்மீநாதனே ! திருக்கோட்டியூர் நகரத்தின் தலைவனான செல்வ நம்பியை போல நானும் உனக்கு பழைமையான அடிமை கண்டாய் ! நல்ல முறையில்(உள்ளத்தில் அன்புடன்) நாராயண, கேசவ, மாதவ என்று உன்னுடைய நாமங்களை பரவி உனக்கு பல்லாண்டு பாடுவேன் !

(சொற்பொருள்)
அல்வழக்கு - தகுதியற்ற செயல்
துங்கன் - உயர்ந்தவன்.
பவித்திரன் - தூயவன்.

[கூடுதல் விளக்கம்]
எப்பொழுதும் உயர்ந்த செயல்களையே புரியும் சாது ஜனங்களால் பெருமை பெற்ற நகரம் திருக்கோட்டியூர். அதன் தலைவரான செல்வநம்பி திருமால் மீது உயர்ந்த பக்தி உடையவர்.
"நான் திருமாலின் அடிமை" என்ற அபிமானத்தினால் உயர்ந்தவர். அதனால் ஆழ்வார் அவரை "அபிமானதுங்கன்" என்று குறிப்பிடுகிறார்.





No comments: