கடவுள் வாழ்த்துப் பாசுரங்கள் - 6


பெரியாழ்வார் திருமொழி - 6

எந்தை தந்தை தந்தை
தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி*
வந்து வழி வழி ஆட்செய்கின்றோம்
திருவோணத் திருவிழவில்*
அந்தியம் போதில் அரி உருவாகி
அரியை அழித்தவனைப்*
பந்தனை தீரப் பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே.

[விளக்கம்]
என்னுடைய தந்தை, பாட்டனார், அவருடைய பாட்டனார் என்று ஏழு தலைமுறைகளாக பகவானுக்கு சேவைசெய்கிறோம். திருவோண நக்ஷத்திரத்திலே நரஸிம்ஹனாக தோன்றி, பகைவனான இரண்யகசிபு என்கிற அசுரனைகொன்ற ஹரியின் களைப்பு தீர "பல்லாண்டு" பாடுங்கள் !

[கூடுதல் விளக்கம்]
பகவான் என்றும் பக்தர்கள் வசப்பட்டவன். அவர்களுடைய துன்பத்தை பொறுக்க முடியாதவன். இரண்யகசிபு பரம பாகவதனான ப்ரஹலாதனை பல விதமான கொடுமைகளுக்கு ஆட்படுத்தியதால் இறைவனுடைய கோபத்திற்கு ஆளானான்.

ஆழ்வார் பகவான் மீது அளவற்ற அன்பை உடையவர் என்பதால் அசுரனை கொன்ற காரியம் பகவானுக்கு களைப்பை உண்டு பண்ணியதாக நினைத்து அந்த களைப்பு நீங்க "பல்லாண்டு" பாடுகிறார். நம்மையும் பாட தூண்டுகிறார்.

(சொற்பொருள்)
அம் - அழகிய
அந்தியம் போது - அழகிய மாலைப் பொழுது
பந்தனை - சோர்வு, ஆயாசம்
அரி - சிங்கம், எதிரி, குரங்கு என்று பல பொருள் கொண்ட பதம்.





No comments: