கடவுள் வாழ்த்துப் பாசுரங்கள் - 8


பெரியாழ்வார் திருமொழி - 8

நெய்யிடை நல்லதோர் சோறும்
நியதமும் அத்தாணிச் சேவகமும்*
கையடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு
காதுக்குக் குண்டலமும்*
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து
என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல*
பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப்
பல்லாண்டு கூறுவனே.

[விளக்கம்]
கருடனை கொடியாக உடையவனே! உண்பதற்கு ருசியான உணவு, உண்ட பின் தாம்பூலம், அணிய நல்ல அணிகலன்கள், உடலில் பூசிக் கொள்ள வாசனை மிகுந்த சந்தனம் என்று பல வகையிலும் எனக்கு அருள் புரிந்து என்னுடைய மனதையும் தூய்மை செய்யும் உனக்கு பல்லாண்டு கூறுவேன் !


[கூடுதல் விளக்கம்]
"கொடியோன்" என்பது கொடியை உடையவன் என்ற பொருள் தரும்.
கருடன் நாகர்களின் பகைவன். திருமால் தன்னுடைய உடலில் கருடனை ஒரு கொடியாக சுற்றி கொண்டு விளங்குகிறார். அதனால் "நாகப் பகை கொடியோன்" என்று அழைக்கப் பெறுகிறார்.

த்வாரகா நாதனான கிருஷ்ணனுடைய திவ்யமான தேரின் கொடியில் கருடச் சின்னம் பொறிக்கப் பெற்று இருக்கும். கருடனை தேர்க்கொடியாக உடைய கிருஷ்ணனுக்கு பாடிய பாசுரமாகவும் பொருள் கொள்ளலாம்.

பேரன்பு மயமான கிருஷ்ணன் தன்னுடைய பக்தர்களின் எல்லா விதமான தேவைகளையும் ஆசைகளையும் பூர்த்தி செய்து தன்னை விட்டு அகலாத வண்ணம் பார்த்துக் கொள்கிறான் என்பது பாசுரத்தின் உட்குறிப்பு.


(சொற்பொருள்)
அடைக்காய் - பாக்கு; தாம்பூலம்;
நியதமும் - எப்பொழுதும்.
சேவகம் - ஊழியம்.
அத்தாணிச் சேவகம் - கொலு மண்டபத்தில் பெருமாள் வீற்றிருக்கும் வேலையில் அவருக்கு செய்யும் ஊழியம் (மாலை அணிவித்தல், சாமரம் வீசுவது முதலியன) ; நீங்காத பகவத் சேவை அல்லது அனுபவம் என்றும் பொருள் கொள்வர்.
மெய் - உடல்
மெய்யிட நல்லதோர் சாந்து - உடலில் பூசிக் கொள்ள வாசனை மிகுந்த சந்தனம்.
வெள்ளுயிர் - வெண்மையான உயிர்; உள்ளத்தூய்மை உடைய உயிர்




No comments: