அமலனாதிபிரான் - 3


அமலனாதிபிரான் - 3

மந்தி பாய் வடவேங்கட மாமலை*
வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து
அரவின் அணையான்*
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன்மேல்
அயனைப் படைத்ததோர் எழில்*
உந்தி மேலதன்றோ ! அடியேன் உள்ளத்து இன்னுயிரே !


[விளக்கம்]
ஸ்ரீரங்கத்திற்கு வடக்கு திசையில் உள்ள வேங்கட மலையில் நின்று அருள் புரியும் வேங்கடநாதனே அரங்க நகருள் ஆதிசேஷன் என்னும் படுக்கை மீது அரங்கனாக கிடக்கிறான். இந்த அரங்கன்(வேங்கடநாதன்) வானில் வாழ்பவரும் வந்து வணங்கும் பெருமை மிக்கவன். முன்பு இவனுடைய அழகிய வயிற்றில் இருந்து 'படைக்கும் கடவுளான பிரமன்' படைக்கப் பெற்றான். இன்று அந்த எழில் வயிற்றில், செவ்வானம் போன்ற நிறத்து ஆடையை அணிந்து கொண்டு, என் இன்னுயிர் அரங்கன் திகழும் அழகே அழகு !! இந்த அழகில் என் உள்ளம் கொள்ளை போகிறதே !! (இந்த அழகிற்கே நான் அடிமையானேன்.)

(சொற்பொருள்)
அயன் - பிரம்மா
மந்தி - குரங்கு
சந்தி - வணக்கம்
அந்தி - செவ்வானம்
உந்தி - வயிறு
அரவு - நாகம் (ஆதிசேஷன்)

[கூடுதல் விளக்கம்]
(மந்தி பாய் வடவேங்கட மாமலை) - குரங்குகள் பாய்ந்து விளையாடும் பெருமை மிக்க திருவேங்கட மலை.

15 comments:

குமரன் (Kumaran) said...

அடடா மீண்டும் வடவேங்கடத்திற்குத் தாவிவிட்டாரே. இவரென்ன ஆற்றுக்குறைக்கும் மலைக்கும் இப்படி தாவிக் கொண்டே இருக்கிறார் - அதில் சிறிய திருவடியின் தோழர்களை வேறு இந்தப் பாசுரத்தில் சொல்கிறார்.

Radha said...

//அடடா மீண்டும் வடவேங்கடத்திற்குத் தாவிவிட்டாரே. //
முந்தைய பாசுரத்தில் காகுத்தனை நினைத்தார் அல்லவா ? அதனால் அனுமன் தன் தோழர்கள் புடை சூழ வந்து விட்டார். பாசுரத்தை படித்த உம்முள்ளும் புகுந்து விட்டார். அதனால் தான் 'ஓடி விட்டார்', அல்லது 'பறந்து விட்டார்'. என்றெல்லாம் சொல்லாமல் 'தாவி விட்டார்' என்று நீரும் சொல்கிறீர். :-)

சிறிய திருவடியை பற்றி பேச்சினை ஆரம்பித்ததனால், 'அனுமன்' என்ற பதம் வரும் பாசுரம் ஒன்றினை சொல்லிவிட்டு போகவும். :-)

குமரன் (Kumaran) said...

இப்படி கேட்டவுடன் எல்லாம் 'அனுமன்' என்று வரும் பாசுரங்களைச் சொல்லத் தெரியாது இராதா. நீங்கள் சொன்னால் நான் படித்திருக்கிறேனா இல்லையா என்று சொல்ல இயலும். :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே!//

திருவடிகள் பார்த்தார் முதல் பாசுரத்தில்!
அடுத்து இடுப்பு ஆடையை ஒட்டி வந்து...
இதில் உந்தி என்னும் தொப்புள் கொடியைப் பார்க்கிறார்!

தொப்புள் கொடி உறவல்லவா நாம் எம்பெருமானுக்கு! அதான் உந்தி மேலதன்றோ அடியேன் உயிரே!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//மந்தி பாய் வடவேங்கட மாமலை*
வானவர்கள்
சந்தி செய்ய நின்றான்//

ஏன்...வானவர்கள் அரங்கத்தில் சந்தி செய்ய மாட்டாங்களாமா?
அரங்கன் உறங்கன் என்பதாலா? :)
விளக்குங்க ராதா விளக்குங்க! :)

//அரங்கத்து அரவின் அணையான்*//

அரவினை *அணை*-ன்னு ஏன் சொல்லணும் ராதா?
அரவணை, அரவணை எதுக்கு இப்படி அரவணைக்கிறாங்க?

பாம்புப் படுக்கை எப்படி அணையாகும்?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இப்படி கேட்டவுடன் எல்லாம் 'அனுமன்' என்று வரும் பாசுரங்களைச் சொல்லத் தெரியாது இராதா//

ஆமா! ரிப்பீட்டே! :)
தெலிசி லேது ராதா! மீரே செப்பண்டி! நேனு வின்னானு! :)

Radha said...

"அனுமன்" பாசுரத்தை முன்பே குமரனுக்கு தனியே மின்னஞ்சல் செய்து இருந்தேன். அதனை ஒற்றி இடுகிறேன்.
*****
எனது நண்பர் ரவி கண்ணபிரானின் அண்ணன் என்பதால் கேட்டுவிட்டேன். மன்னிக்கவும். :)
ஒரு பாசுரம் சொல்கிறேன். ஒருகால் அனுமனும் சீதையும் பெரியாழ்வார்
உள்ளத்தில் புகுந்தனர். அப்பொழுது ஆழ்வார் அருளிய பாசுரங்கள் - "நெறிந்த
கருங்குழல் மடவாய் !..." - என தொடங்கும்; அவற்றுள் ஒன்று கீழே உள்ளது:

திக்கு நிறை புகழாளன் தீ வேள்வி சென்ற நாள்
மிக்க பெரும் சபை நடுவே வில் இறுத்தான் மோதிரம் கண்டு
'ஒக்குமால் அடையாளம், அனுமான் !' என்று உச்சி மேல்
வைத்துக் கொண்டு உகந்தனளால் மலர்குழலாள் சீதையுமே.
:)
****

Radha said...

//பாம்புப் படுக்கை எப்படி அணையாகும்?//
அணை = comfort providing supporting object. வசதியாக தலையை வைத்துக் கொள்ள உதவுவது "தலையணை" என்று கேள்வி பட்டதில்லையா? வசதியாக படுக்க (உடலை கிடத்த) உதவுவது படுக்கை.
இதற்கு மேலே, "தெரிந்தே கேட்கும் கேள்விகள் போல தெரிந்தால் பதில் சொல்லாதே !" என்று என் கிரிதாரியின் கட்டளை. :-)

"அரவணை" பிடிக்கலைன்னா "பாம்பணை" -னு வர்ற மாதிரி பாசுரம் சொல்லுங்க. :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

எனக்கு மிகவும் பிடித்த சிறிய திருவடிகளான என் அன்பன் ஆஞ்சநேயனைச் சொல்லாமல் வேறெங்கு செல்வேன்? :)

அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த
"அனுமன் புகழ் பாடித்" தம் குட்டன்களை
குடங்கைக் கொண்டு மந்திகள் கண் வளர்த்தும்
கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே

என்று பெரியாழ்வார் பாடுவார்!

வாலியைக் கொன்று இலங்கை நகர் அரக்கர் கோமான்
சினம் அடங்க "மாருதியால்" சுடுவித் தானைத்
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்...காண்மினே
-ன்னு வரும் ன்னு நினைக்கிறேன்! குலசேகராழ்வார் பாசுரம்!

அனுமனை வாழ்க வாழ்க என்று தான் போற்றும் பாசுரங்கள் பலவும்.

ஆற்றல் சான்ற தொல் பிறப்பில் "அனுமனை வாழ்க"வென்று
கூற்றம் அன்னார் காண ஆடீர் குழமணி தூரமே!
- திருமங்கை திருமொழி

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இதற்கு மேலே, "தெரிந்தே கேட்கும் கேள்விகள் போல தெரிந்தால் பதில் சொல்லாதே !" என்று என் கிரிதாரியின் கட்டளை. :-)//

அட ஆண்டவா...இந்தக் கொடுமையை நான் என்னன்னு சொல்ல? :)
தெரிந்தே கேட்கும் கேள்விகள் போல தெரிந்தால், தெரிந்தே போல் பதில் சொல்லணும்-ன்னு தெரிந்தே போல் தெரியாதா உமக்கு? :)

//அணை = comfort providing supporting object. வசதியாக தலையை வைத்துக் கொள்ள உதவுவது "தலையணை" என்று கேள்வி பட்டதில்லையா?//

accepted!

//வசதியாக படுக்க (உடலை கிடத்த) உதவுவது படுக்கை//

not accepted :)
தலையணை supporting object, ஆனா படுக்கை? சப்போர்ட் மட்டுமல்ல! மொத்தமும் கிடத்துவது!
தலையணை-ன்னு சொல்றவங்க, கட்டில் அணை, படுக்கை அணை, மேனி அணை, உடல் அணை-ன்னு சொல்லலாம்-ல? ஏன் சொல்லலை? :))

ஐவாய் "அரவணை" மேல் ஆழிப் பெருமானார்,
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந் நீர்மை தோற்றாயே!

குட திசை முடியை வைத்து
குண திசை பாதம் நீட்டி
வட திசை பின்பு காட்டி
தென் திசை இலங்கை நோக்கி
கடல் நிறக் கடவுள் எந்தை
"அரவணைத்" துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோஓஓஓஓஓஓ
என் செய்கேன் உலகத்தீரே!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறியோர் நீளிரவாய் நீண்டதனால்....
பாரெல்லாம் உண்ட நம் "பாம்பணையான்" வாரானால்
ஆரெல்லே? வல்வினையேன் ஆவி காப்பார் இனியே?

Radha said...

அணை என்றாலே படுக்கை என்று(ம்) அர்த்தம். கட்டிலும் ஒரு வகையில் படுக்கை தான்.
பிறகு "படுக்கை அணை", "கட்டில் அணை" என்று ஏன் அநாவஸ்யமாக ஒரே பொருளை குறித்து இரு முறை விளிக்க வேண்டும்?

"அரவு + அணை = அரவணை" அப்படின்னு நெனைச்சிட்டு இருக்கேன்.

//
Radha said...
வசதியாக படுக்க (உடலை கிடத்த) உதவுவது படுக்கை
//
//Ravi said...
படுக்கை? சப்போர்ட் மட்டுமல்ல! மொத்தமும் கிடத்துவது!
//

நான் "படுக்கை" என்பதைப் பற்றி என்ன சொல்லி இருக்கேனோ அதையே நீங்களும், ஆனா வேற வார்த்தைகளால் சொல்ற மாதிரி இருக்கு. :-)

நீங்க வேற ஏதாவது அர்த்தத்தில் சொல்லி இருந்தா, ம்ஹூம் ! எனக்கு இன்னும் புரியலே. :-)
எனக்கு தெரிஞ்ச வேற "அரவணை" - ஸ்ரீ ரங்கத்தில் தர்ற பிரசாதம், அரவணை பாயாசம் முதலிய சாப்பாடு வகையறாக்கள் தான்...:-)

"அரவணை" பாசுரங்கள் எக்கசெக்கம்மா இருக்கு.

தொண்டரடி போலவே,
"அரவணையாய் ஆயரேரே அம்மமுண்ண துயிலெழாயே!..."

"கோழி யழைப்பதன் முன்னம்
குடைந்துநீ ராடுவான் போந்தோம்,
ஆழியஞ் செல்வ னெழுந்தான்
அரவணை மேல்பள்ளி கொண்டாய்"

என்று ஒங்க தோழியும் அவள் தந்தையும் பாடியுள்ளார்கள். :)

Radha said...

//ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறியோர் நீளிரவாய் நீண்டதனால்....
பாரெல்லாம் உண்ட நம் "பாம்பணையான்" வாரானால்
ஆரெல்லே? வல்வினையேன் ஆவி காப்பார் இனியே? //

கலக்கி தள்ளிட்டீங்க !! :-)
மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் !
நம்மாழ்வார் திருவடிகளே சரணம் !

Radha said...

"அனுமன்" பாசுரங்கள் பொழிந்தமைக்கு நன்றி. "அனுமன்" இலங்கையை சுட்டது, ராமனுக்கு சேவை செய்தது எல்லாம் ராமாயணத்தில் வரும் நிகழ்ச்சி.
ராதாவின் தங்கம், பிருந்தாவன கிருஷ்ணனுடைய குருஷேத்ர லீலைகளை விஸ்தரிக்கும் மகாபாரதத்தில், பார்த்தனுடைய தேர்க் கொடியில் அனுமன் வீற்று இருப்பார். இதனை குறித்து வரும் ஒரு பாசுரம் உள்ளது. :-)
(இதுக்கு மேல என்கிட்டே சரக்கு இல்லை. :-) :-()

Radha said...

Typo corrected...
"அரவணையாய் ஆயரேறே !"