கையினார் சுரிசங்கனலாழியர் ! நீள்வரைபோல்
மெய்யனார் ! துளபவிரையார்கமழ் நீள்முடி எம்
ஐயனார் ! அணியரங்கனார் ! அரவினணைமிசை மேயமாயனார் !
செய்யவாய் ஐயோ ! என்னைச் சிந்தை கவர்ந்ததுவே.
[விளக்கம்]
"ஐயோ ! இந்த அழகை எங்கனம் சொல்வேன்? (ஆதிசேஷன் என்கிற) நாகத்தினை தனது படுக்கையாகக் கொண்டு ஒரு பெரிய மலை போல கண் வளர்கிறான் ! அழகான சங்கு சக்கரங்களை தன் கைகளில் தாங்கியுள்ளான் ! நீண்ட மணிமுடியில் துளசி மணம் நிறைந்து பரவுகிறதே ! இன்று என் சிந்தை மோசம் போனது ! பல மாய சாகசங்கள் செய்து, ஆதரத்துடன் தன் அடியாரை ஆட்கொள்ளும் என் ஐயன், அன்பே உருவான அரங்கன், இன்று தன் அதரங்களால் என்னை ஆட்கொண்டானே !!"
[கூடுதல் விளக்கம்]
[சொற்பொருள்]
ஆர் - நிறைந்த; நன்றாக; அழகான;
சுரி - சுழி; துளை
ஆர் சுரி சங்கு - நன்றாக சுழிந்துள்ள சங்கு;
ஆர் சுரி சங்கு - கலை அழகு மிகுந்து விளங்கும் அழகான துளை சங்கு;
ஆழி - சக்கரம்
அனலாழி - தீ உமிழும் சக்கரம்; கண்ணை பறிக்கும் ஒளியுடன் திகழும் சக்கரம்;
வரை - மலை
மெய் - உடல்
துளபம் - துளசி
துளப விரை - துளசி மணம்.
துளப விரை ஆர் கமழ் - துளசி மணம் நிறைந்து கமழும்.
அணி - அழகு, அன்பு, இனிமை; அடுக்கு; வரிசை; ஆபரணம்
அரவு - நாகம்; (இங்கு ஆதிசேஷன்)
மிசை - மேல்; மேலிடம்
மேய்தல் - உறைதல்
செய்ய வாய் - சிவந்த வாய்
[ஒப்புநோக்கு]
பொதுவாக பகவானின் இதழ்களை, இதழ்களின் நிறத்தினை, தாமரை மலருடன் ஒப்பிட்டுப் பாடுவர்.
திருமாலின் கண்களும், வாயும், உள்ளங்கைகளும், பாதங்களும் சிவந்த வண்ணம் கொண்டு இலங்குவதாக எண்ணற்ற பாசுரங்கள் உள்ளன.
உதாரணமாக திருமங்கை ஆழ்வார் அருளிய கீழ்கண்ட பாசுரங்களைக் குறிப்பிடலாம்.
"கை வண்ணம் தாமரை; வாய் கமலம் போலும்;
கண்ணினையும் அரவிந்தம்; அடியும் அஃதே;" (திருநெடுந்தாண்டகம்-21)
"கார்வண்ணம் திருமேனி; கண்ணும், வாயும்
கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம்" (திருநெடுந்தாண்டகம்-18)
சில சமயம் திருமாலின் இதழ்களின் அழகை, சிவந்த நிறம் கொண்ட பவளத்தினோடு ஒப்பிடுவர்.
"என் அரங்கத்து இன்னமுதர் குழல் அழகர், கண் அழகர் வாய் அழகர்" என்று அரங்கனை கொண்டாடும் ஆண்டாள்,
"திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ"
என்று சங்கை வினவுகிறாள். (நாச்சியார் திருமொழி - 7.1)
இதே உவமையில் இன்னொரு பாசுரம் - பகவானின் திருமேனி அழகு அவன் அடியார்கள் நெஞ்சை விட்டு அகலாது என்று தொண்டரடிப் பொடி ஆழ்வார் பாடும் பாசுரம்:
"பாயும் நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திருநன் மார்வும் மரகத உருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவரிதழ்ப் பவள வாயும்
ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே." (திருமாலை - 20 )
இதே தொண்டரடிப்பொடி ஆழ்வார், கண்ணனின் இதழ்கள் சிவந்த கனியைப் போல (கோவைப் பழம்) போல இருப்பதாகப் பாடுகிறார்.
"கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனை கண்ட கண்கள்
பனி அரும்பு உதிருமாலோ!" (திருமாலை - 18)
நம்மாழ்வார், தான் வளர்த்த பச்சைக் கிளியைப் பார்த்து பாடுவதாக ஒரு பாசுரம். கிளியின் தோற்றம் அவருக்கு ராமனை நினைவு படுத்துகிறது.
இங்கு ராமன், "கிளியின் வாயினை ஒத்த சிவந்த வாயன்" என்று பாடுகிறார்.
"நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
....என் உயிர் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன், கண்ணன் கை காலினன்
நின் பசும் சாம நிறத்தன்" (திருவாய்மொழி - 9.5.6)
கண்ணனின் சிவந்த இதழ்களை, எந்த உவமையும் இல்லாமல் வெறும் "செய்யவாய்" என்று மட்டுமே குறிப்பிட்டும் நிறைய பாசுரங்கள் உள்ளன.
"கரியகுழல் செய்யவாய் முகத்து காகுத்த நம்பீ! வருக இங்கே" (பெரியாழ்வார்-2.9.2)
"மாசு அறு சோதி என் செய்யவாய் மணிக்குன்றத்தை"( திருவாய்மொழி - 5.3.1)
"காரினம்புரை மேனி நல்கதிர் முத்த வெண்ணகைச் செய்யவாய் ஆரமார்வன்"(பெருமாள் திருமொழி-2.7)
"மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே !
என்னும்; மாமாயனே! என்னும்
செய்யவாய் மணியே ! என்னும்; தன்புனல்சூழ்
திருவரங்கத்துள்ளாய் என்னும்..."( திருவாய்மொழி - 7.2.6)
15 comments:
மீள் நல்வரவு ராதா! :)
யப்பாடி, இந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் போட்டே இளைச்சிட்டேன்! :) எத்தனை முறை இந்த இடுகையைப் பதிப்பிங்க? Offline, Online, Offline, Online...என்ன ஆச்சு ராதா?
இந்த ஏழாம் பாசுரம் எனக்கு ரொம்ப பிடித்தமானது! ஏன்-ன்னா இதுல தான் ரெண்டு இனிப்பான விஷயம் வரும்! செய்யவாய் + ஐயோ :)
எதுக்குமே ஹைய்யோ சொல்லாதவரு, இதுக்கு மட்டும் இப்படி ஒரு விளிப்பா!
கம்பரும், இப்படி ஒரு ஐயோ சொல்லுவாரு!
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ!
ஐயோ இவன் வடிவு என்பதோர் அழியா அழகு உடையான்!
எம் ஐயனார்-ன்னு சொல் கூட நல்லா இருக்கு!
எம் ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால்...
பொய்யனேன் வந்து நின்றேன், பொய்யனேன் பொய்யனேனே!
சரி, இப்போ கேள்விகள்! :)
சுரி சங்கு-ன்னா என்ன? புரி சங்கு, சுரி சங்கு-ன்னு எத்தினி பேருப்பா? :)
அனல் ஆழி - சக்கரம் எப்பமே சூடா இருக்குமா? :)
சுடராழி புரியுது, அது என்ன அனல் ஆழி?
//நீண்ட மணிமுடியில் துளசி மணம் நிறைந்து பரவுகிறதே//
அரங்கன் தோள்-ல்ல தான் துளசி மாலை சூடிப்பான்! தலையில் கூட துளசி வச்சிக்குவானா என்ன? :)
முடியில் மணம் வருது-ன்னு இவரும் பாடறார்! நாற்றத் துழாய் முடி-ன்னு அவளும் பாடறாள்! ஏனோ?
அணி அரங்கம்-ன்னு ஒரு பெரிய மண்டபம் வேற இருக்கு-ல்ல? திருமங்கை கட்டினது!
//பெரிய மலை போன்ற திருமேனியை உடைய கண்ணபிரான்//
அய்யோ! எனக்கு அவ்ளோ பெரிய ஜிம் பாடி எல்லாம் இல்ல! :)
செய்ய வாய்ப் பாசுரங்களைப் பொழிந்தமைக்கு நன்றி! :)
இதுக்கு இன்னொரு பொருளும் இருக்கு!
செய்ய வாய் = செய்யும் வாய், செய்ய வல்ல வாய்!
அதாச்சும் வெறுமனே வாய் தான், வாய்ச்சொல்-ன்னு சொல்றோம்-ல்ல? அப்படி இல்லாம, அவன் சொல்ற ஒவ்வொரு சொல்லும், கண்டிப்பா செயலில் காட்டுவானாம்! = செய்ய வாய்!
* சரணம் வ்ரஜ, மோட்ச இஸ்யாமி-ன்னு வாயால் சொன்னவன் = சொன்ன வாய்
* அதைச் செயலிலும் காட்டுகிறான்! = செய்ய வாய்!
//கை வண்ணம் தாமரை; வாய் கமலம் போலும்;
கண்ணினையும் அரவிந்தம்; அடியும் அஃதே;//
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ!
அரங்கன் திருமேனியில் ஒரு தாமரைக் காடே பூத்து இருக்கு!
ஒரு தாமரை, இரு தாமரை அல்ல! பெரும் தாமரைக் காடு!
தாமரைக் காடு பூத்து = எம்பெருமான் திருமேனியில் மொத்தம் ஒன்பது தாமரைகள்!
* திரு விழிகள் = 2
* செவ்விதழ்கள் = 2
* முகத் தாமரை = 1
* பத்ம நாபம் (தொப்புள் கொடி) = 1
* திருவடிகள் = 2
* இதோடு கூடே...மலர்மாமகள், அலர்மேல்மங்கை அவன் மார்பில் = 1
இப்படி உடலெங்கும் தாமரைக் காடு பூத்துள்ளது!
தயங்குமொரு பச்சைப்பருவ முகில் வருவ = அதில் நடுநடுவே அவன் பச்சை உருவம், பச்சை மாமலை....தயங்கித் தயங்கி எட்டிப் பார்க்கிறது! ஏனாம்?
உடம்பெங்கும் தாமரைக் காடு
அதில் அப்படி ஒரு செம்மை ஜாஜ்வல்யமாய் ஜொலிக்க....
ஆகா பச்சை மாமலை போல் மேனி என்று நம்மைத் தானே சொன்னார்கள்! ஆனால் அந்தப் பச்சையை மறைத்து, இப்படித் திடீரென்று செம்மை பூத்து விட்டதே-ன்னு...திருமேனியின் இதர பாகங்கள்...தயங்கித் தயங்கி எட்டிப் பார்க்கின்றன!
தெரிந்த பாகங்கள் உயிரைத் தந்திட
மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட
காதல்-சென்மம் மரணம் ரெண்டும் தருபவனே... :)
அப்பறம் எப்படிப் பச்சை மாமலை போல் மேனி-ன்னு பாடினாங்க? செவப்பு மாமலை போல் மேனி-ன்னு பாட வேணாமா? இயற்கையான பச்சை நிறத்துக்குத் தான் இப்போ செவப்பு மேக்கப் போட்டாச்சே! :)
என்ன இருந்தாலும் செவப்பு, சேயோன்-ன்னா என் முருகன் தான்-ப்பா! இவிங்க எல்லாம் வெறும் மேக்-அப் தான்! :)))
//ஸ்ரீரங்கத்தில் மூலவர் (பெரிய பெருமாள்) எந்த விதமான ஆயுதங்கள் இல்லாமலும், இரண்டு கைகள் மட்டும் கொண்டவராக சயனித்திருந்தாலும், திருப்பாணருக்கு சங்கு சக்கரங்களுடன் கூடிய தரிசனம் கிடைக்கிறது//
ஹிஹி! இதெல்லாம் கேள்வியாக் கேட்கலாம்-ன்னு வச்சிருந்தேன்! ஆனா அதுக்குள்ளாற பதிவு மாறிடுச்சே! :)
அரங்கத்தில் அரங்கனுக்கு சங்கு சக்கரங்கள் ஏதும் இல்லாமல், இரு திருக்கரங்கள் மட்டும் காட்டப் பெறுவது ஏன் ராதா?
இது அரங்கனுக்கு மட்டுமா? இல்லை அனைத்து சயனக் கோலத்துக்குமா?
முருகா...இன்றைய ராதா மண்டகப்படி முடிஞ்சிது! :)
ஆங் சொல்ல மறந்துட்டேனே! அமலனாதிப்பிரான் தொடர்ந்தமைக்கு நன்றி! அதே போல் இன்னும் மூனு பாசுரமும் நிறைவா நிறைவு செஞ்சிருங்க! என்ன புரிஞ்சுதா?
அச்சோ, போன பின்னூட்டத்தில் ஒரு ஸ்மைலி விட்டுப் போச்சி! ஏதோ ராதாவை அதட்டினேன்-ன்னு நினைச்சிக்கப் போறாங்க!
Here we go! = :)
அருமை அருமை அருமை!
தொடர்ந்து எழுதுங்கள்!
Regards
http://srikamalakkanniamman.blogspot.com
rajesh narayanan
Ungal blog-l follow eppadi panrathu
followers settinge illaiye
illanaa padivu potthaa mail panreengalaa
சொற்பொருள்]
ஆர் - நிறைந்த; நன்றாக; அழகான;
சுரி - சுழி; துளை
ஆர் சுரி சங்கு - நன்றாக சுழிந்துள்ள சங்கு;
ஆர் சுரி சங்கு - கலை அழகு மிகுந்து விளங்கும் அழகான துளை சங்கு;
ஆழி - சக்கரம்
அனலாழி - தீ உமிழும் சக்கரம்; கண்ணை பறிக்கும் ஒளியுடன் திகழும் சக்கரம்;
வரை - மலை
மெய் - உடல்
துளபம் - துளசி
துளப விரை - துளசி மணம்.
துளப விரை ஆர் கமழ் - துளசி மணம் நிறைந்து கமழும்.
அணி - அழகு, அன்பு, இனிமை; அடுக்கு; வரிசை; ஆபரணம்
அரவு - நாகம்; (இங்கு ஆதிசேஷன்)
மிசை - மேல்; மேலிடம்
மேய்தல் - உறைதல்
செய்ய வாய் - சிவந்த வாய்::)))))))
எப்படி இந்த மாதிரி பிரிச்சி மேயறீங்க!
நீங்கள் வகுப்புக்கு சென்று கற்றுல்லீர்கள் என்று தெரிகிறது.
தயவு செய்து
இந்த மாதிரி விளக்கம் தெரிஞ்சிக்கிற மாதிரி புத்தகம் இருந்ந்தால் சொல்லுங்கள்!
நானும் வாங்கி படிக்கிறேன்!
விரைவில் தங்கள் பதிலை எதிர்பார்கிறேன்!
http://srikamalakkanniamman.blogspot.com
mail id:- apnkrajesh@gmail.com
rajesh naryanan
Rajesh,
Have added the "followers" gadget now. Nice to know that you too are interested in paasurams. :-)
Please pay a visit to the famous book shop "Sri Ranga Sri" in Srirangam. You will find lot of books explaining the meaning of the pasurams.
//ராதாவை அதட்டினேன்-ன்னு நினைச்சிக்கப் போறாங்க! //
:-)))
Post a Comment